முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
வராத நடிகர்கள் - இயக்குநர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னையில் ஓகனேக்கல் விவகாரம் தொடர்பாக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைககள் 15 நாட்களுக்குள் விலக்கம் தர வேண்டும் என நடிகர் சங்கம் கெடு விதித்துள்ளது.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகத்தைக் கண்டித்து சென்னையில் கடந்த 4ம் தேதி பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் திரையுலகினர் நடத்தினர்.

இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என திரையுலகின் அனைத்து சங்கங்களும் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் போராட்டத்தில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க நேற்று திரையுலகினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ரஜினிகாந்த்துக்கு பெங்களூரில் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும், அவரவர் சங்கத்தின் சார்பில் தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது, 15 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் தருவது. விளக்க கடிதம் பெற்றவுடன் அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.

* கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர் ரஜினிகாந்த் படங்களுக்கு தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதைத் தவிர்க்க வேண்டும் என்று கர்நாடக திரை அமைப்புகளுடன் கலந்து பேசி சுமூகமான முடிவினை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* எதிர்காலத்தில் தமிழ்த் திரையுலகமும், கன்னடத் திரையுலகமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கேஆர்ஜி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் சிம்பு, முரளி, நடிகைகள் மும்தாஜ், விந்தியா, இயக்குநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி சார்பில் உமா சங்கர்பாபு, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் சார்பில் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வந்த நடிகை மும்தாஜ் கூறுகையில், உண்ணாவிரதம் நடந்த நாளன்று நான் உடல் நல சோதனைக்காக மும்பை செல்ல வேண்டியிருந்தது. நீண்ட முயற்சிக்குப் பின்னர் எனக்கு டாக்டர்களைச் சந்திக்க நேரம் கிடைத்ததால் என்னால் உண்ணாவிரதத்திற்கு வர முடியவில்லை. இதுகுறித்து எனது சங்கத் தலைவரிடம் விளக்கி கடிதம் கொடுத்துள்ளேன் என்றார் மும்தாஜ்.

-எஸ்.எஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.