முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மருத்துவக் காப்பீட்டின் மகத்துவம்

மருத்துவக் காப்பீட்டின் மகத்துவம்

இன்றைய சூழலில் மனிதனுக்கு மிகவும் அவசியமானது, மருத்துவக் காப்பீடு. போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசும், இயந்திர கதி வாழ்க்கையும் ஒரு மனிதனை எப்போது வேண்டுமானாலும் நோயாளியாக்கும் தகுதிகளைப் பெற்றுள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியால் எப்படிப்பட்ட பிரச்சினையும் சீர் செய்து விட முடியும். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலம் எல்லாம் மலை ஏறிப் போய், தற்போது நுண் துளை வழியாகவே எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

உடல் முழுவதையும் அலசி ஆராயும் சிடி ஸ்கேன், உடல் உள் உறுப்புகள் சேதமடைந்தாலோ, பழுதடைந்தாலோ மாற்று உறுப்பு பொருத்துதல் என மருத்துவ உலகம் விரிவடைந்து கொண்டே போகிறது. பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் நவீன தொழில்நுட்ப மருத்துவத்தை பெறுவது என்பது சராசரி மக்களுக்கு இயலுகிற விலையிலா உள்ளன? ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பவர்களே பெரிய பெரிய மருத்துவமனைகளின் கட்டணங்களைப் பார்த்து திணறிப் போய் விடுகின்றனர். அந்த அளவிற்கு மருத்துவக் கட்டணங்கள் உயர்ந்து இருக்கின்றன.

நமக்கு நோய் வந்ததும் அதற்கு எந்த மருத்துவமனை சிறந்தது என்று பார்ப்பதை விட… நமது பொருளாதார பலத்திற்கு எந்த மருத்துவமனை சிறந்தது என்றுப் பார்த்துதானே சிகிச்சையே பெறப் போகிறோம். உயிர்தான் முக்கியம் என்று பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துவிட்டு பின் விழிபிதுங்கி நிற்கும் எத்தனையோ குடும்பங்களைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் தவிர்க்கலாம் மருத்துவக் காப்பீடு மூலம். ஆம், தற்போதைய நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
மருத்துவக் காப்பீடு என்பது தனி ஒருவருக்கோ, குடும்பத்தினருக்கோ, குழுவினருக்கோ என எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக காப்பீடு எடுக்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகை என்றும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு என்பதும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையை காப்பீடு எடுத்துக் கொள்ள விரும்பும் நபர் முழுமையாகவோ அல்லது தவணை முறையிலோ காப்பீடு நிறுவனத்திடம் அளித்திட வேண்டும்.

நாம் காப்பீடு எடுத்திருக்கும் காலக்கட்டத்திற்குள் நமக்கு ஏற்படும் மருத்துவச் செலவை இந்த காப்பீடு நிறுவனம் ஈடு செய்யும். அதாவது காப்பீடு எடுத்திருக்கும் தொகை மற்றும் நமக்கான மருத்துவ செலவு இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும்.

ஒரு சில ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ஊ‌ழிய‌ர்களு‌க்கான மரு‌த்துவ‌க் கா‌ப்‌பீடு எடு‌த்து‌க் கொடு‌க்‌கிறது. இதுபோ‌ன்ற மருத்துவக் காப்பீடுகள், நமக்கு செலவாகும் தொகையை நேரடியாக மருத்துவமனையின் கணக்குக்கு அனுப்பி விடுகின்றன.

மருத்துவமனையில் தங்கும் அறை, மருத்துவருக்கான கட்டணம், அறுவை சிகிச்சை நடந்தால் அதற்கான தொகை போன்ற பல செலவுகள் இந்த காப்பீட்டில் அடங்கியிருக்கும்.

யார் தகுதியானவர்கள்?

ஐந்து வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு ஏற்ப இந்த வயது வித்தியாசம் கொஞ்சம் மாறுபடலாம். தனி நபரோ, ஒரு குடும்பத்தாரோ, ஒரு குழுவினரோ சேர்ந்து கூட மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

பல வகைப்பட்ட காப்பீட்டு முறைகள் உள்ளன. அதாவது தனி நபருக்கு, குழுவினருக்கு, குடும்பத்தாருக்கு, முதியவர்களுக்கு, நீண்ட நாட்களுக்கான காப்பீடு, குறிப்பிட்ட நோய்க்கான காப்பீடு, விபத்துக்கான காப்பீடு என பல வகைகளில் உள்ளன.

இவற்றில் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டினை தேர்வு செய்து காப்பீடு செய்து கொள்வது சிறந்தது.

இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.2 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்றவற்றில் 75 விழுக்காட்டு மக்கள் ஏதாவது ஒரு மருத்துவக் காப்பீட்டினை எடுத்திருப்பார்கள். இதற்கு அதிகக் காரணங்கள் உள்ளன.

அதாவது நமது நாட்டில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் மக்களைச் சென்று சேரும் வகையில் விளம்பரத்தையோ, விளக்கத்தையோ கொடுப்பதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் சில தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், தாங்கள் பதிவு செய்துள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நாம் சிகிச்சை பெறும் கட்டாயத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன.

மேலும், மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும் கூட விபத்திலோ, அவசர சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும்போது நமது சொந்தப் பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டி உள்ளது. சிகிச்சை பெற்று காப்பீட்டு பணம் கைக்கு வந்து சேர ஆறு மாதங்கள் கூட ஆகி விடுகிறது.

இந்த குறையை நீக்கிவிட்டுப் பார்த்தால், மருத்துவக் காப்பீடு இன்றைய சூழலில் வரப்பிரசாதமே!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.